கோலாலம்பூர்: மலேசியாவின் முதலீட்டு நிறுவனமான 1எம்டிபி உடனான தொடர்பு குறித்து தகவல்களை வெளியிடுமாறு டாய்ச் வங்கி, ஜேபி மோர்கன் ஆகியவற்றிடம் அமெரிக்க நீதித் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூருக்கும் அமெரிக்க அதிகாரிகள் பயணம் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. முதலீட்டு நிறுவனத்துடன் உள்ள நெருக்கமான தொடர்பு குறித்து அவர்கள் தகவல் அறிய விரும்பியதாகவும் அடையாளம் தெரியாத மூன்று தகவல்களை சுட்டிக்காட்டி மலேசிய ஊடகம் ஒன்று குறிப்பிட்டது.
ஆனால் தற்போதைய விசாரணையில் அந்த இரண்டு வங்கிகளும் இலக்காகக் கொள்ளப்படவில்லை. இருப்பினும் தகவல்களை வெளியிட மட்டுமே கேட்டுக் கொள்ளப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் டாய்ச் வங்கியும் ஜேபி மோர்கனும் அமெரிக்க நீதித்துறையும் இது குறித்துத் தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டன. இருந்தாலும் இந்த விவரங்கள் இன்னமும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.