ஜப்பானின் நீர்மூழ்கிக் கப்பல் ஒயாஷியோ, 2 நாசகாரிப் போர்க்கப்பல்களுடன் சர்ச்சைக் குரிய தென்சீனக் கடல் பகுதிக்கு அருகே உள்ள பிலிப்பீன்சின் துறைமுகத்தை நேற்று அடைந்தது. அக்கப்பல்களை பிலிப்பீன்ஸ் கடற்படை வீரர்கள் மேள தாளத்துடன் வரவேற்றனர். அண்டை நாடுகளின் கடற்படைகளுக்கு இடையேயான கடற்துறை ஒத்துழைப்பு மேம்படுத்துவது, வட்டாரத்தில் அமைதி, நிலைத் தன்மையை மேம்படுத்துவது போன்றவையே இந்தக் கப்பல்கள் வருகையின் நோக்கம் என பிலிப்பீன்ஸ் கடற்படைப் பேச்சாளர் லியுட் லின்குனா கூறினார். அமெரிக்காவும் பிலிப்பீன்சும் இன்று முதல் 12 நாட்களுக்கு இராணுவப் பயிற்சியில் ஈடுபடவுள்ளன. அதைத் தொடர்ந்து ஜப்பானின் நீர்மூழ்கி, போர்க்கப்பல்களின் வருகை அமைந்துள்ளது.
சீனாவின் இறையாண்மைக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது என மற்ற நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ள வேளையில் அமெரிக்காவும் பிலிப்பீன்ஸ் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இருந்தும் இப்பயிற்சிகள் சீனாவை குறி வைத்து நடத்தப்படவில்லை என்று அந்நாடுகள் வலியுறுத்தியுள்ளன. அமெரிக்காவுடனான ராணுவ ஒப்பந்தப்படி பீலிப்பீன்ஸ் தனது ஐந்து இராணுவத் தளங்களில் அமெரிக்கக் கடற்படைக்கு இடம் தருவதற்குத் தயாராகி வருகிறது. அவற்றில் ஒரு தளம், சர்ச்சைக்குரிய தென்சீனக்கடலை எதிர்நோக்கியவாறு உள்ளது.
சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் ஜப்பானுடனான நல்லுறவையும் பிலிப்பீன்ஸ் மேம்படுத்த விரும்புகிறது. ராடார் தொழில் நுட்பம், ராணுவத் தளவாடங்கள் போன்றவற்றை பிலிப்பீன்சுக்கு வழங்குவதற்கு ஜப்பான் இசைந்துள்ளது. சீனா தென்சீனக் கடல் பகுதியின் முக்கால் பகுதிக்கு சொந்தம் கொண்டாடி வருகிறது. அதேபோல் தைவான், புருணை, வியட்னாம், மலேசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இந்த நாடுகள் அனைத்தும் உரிமை கோரும் இந்த கடற்பகுதி எண்ணெய் வளம் கொண்டதாகக் கூறப்படுகிறது.