மணிலா: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் டெங்கிக் காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசி போடும் நடவடிக்கையை பிலிப்பீன்ஸ் தொடங்கியுள்ளது. அங்கு 1 மில்லியன் பள்ளி சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் இந்த தடுப்பூசியைப் போட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. புறநகர் பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களில் படிக்கும் 9 வயது மற்றும் 10 வயதுடைய சுமார் 600 மாணவர்களுக்கு நேற்று டெங்கி தடுப்பூசி போடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மணிலா உள்ளிட்ட மூன்று நகரங்களிலும் மாணவர்களுக்கு அந்த தடுப்பூசி போடப்படவுள்ளது.
பிலிப்பீன்சில் டெங்கிக் காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டு வருவது பொது சுகாதாரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று சுகாதார அமைச்சர் ஜெனர் கேரின் கூறியுள்ளார். ஒன்பது வயதான மாணவர் களுக்கு இத்தகைய தடுப்பூசி போடுவதன் மூலம் டிங்கி பாதிப்பை 25 விழுக்காடாக குறைக்க முடியும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மணிலாவின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு டெங்கி தடுப்பூசி போடப்படுகிறது. ஒரு சிறுமிக்கு தாதி ஒருவர் தடுப்பூசி போடும்போது அந்த சிறுமி தன் முகத்தை மூடிக் கொள்கிறார். கொசுக்களால் பரவும் டெங்கிக் காய்ச்சலால் உலகில் ஆண்டுக்கு 390 மில்லியன் பேர் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. பிலிப்பீன்சில் சென்ற ஆண்டு 200,000 பேர் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். படம்: ஏஎப்பி