கோலாலம்பூர்: மலேசிய நாடாளுமன்றத்தின் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட பொதுக் கணக்குக் குழு, மலேசியாவின் நிதி முதலீட்டுப் பிரச்சினைகளுக்கு 1எம்டிபியை நிறுவிய தலைமை நிர்வாகி மீது குற்றம் சுமத்தியுள்ளது. இந்தப் பிரச்சினைகளால் நாட்டுச் சந்தைகளின் மீதான நம்பிக்கை வீழ்ச்சியுற்றதுடன் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கை பதவி விலகுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டது. அரசாங்கத்தின் நிதி நடைமுறைகளை மறுஆய்வு செய்யும் குழு 100 பக்கங்களுக்கான அறிக்கையை நேற்று சமர்ப்பித்தது. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு 1எம்டிபியின் இயக்குநர்கள் அனைவரும் தங்களது பதவி விலகலை நிதி அமைச்சிடம் சமர்ப்பித்துவிட்டதாகக் கூறினர்.
இது மிகவும் கடினமான முடிவாக இருந்தாலும் மேற்கொண்டு விசாரணை செய்வதில் ஏதும் இடையூறு இல்லாமல் இருப்பதற்காக பொதுக் கணக்குக் குழுவின் பரிந்துரைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக 1எம்டிபியின் அறிக்கை தெரிவித்தது. பொதுக் கணக்குக் குழு, "முன்னாள் 1எம்டிபி தலைமை நிர்வாக அதிகாரி ஷஹ்ரோல் அஸ்ரல் இப்ராஹிம் ஹல்மிதான் 1எம்டிபி தொடர்பான பலவீனங் களுக்கும் பிரச்சினைகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும். வேறு யாருக்கும் இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து ஷஹ்ரோல் அஸ்ரலிடம் அமலாக்க அமைப்புகள் விசாரணை நடத்த வேண்டும்," என்று அதன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.