கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு சவூதி அரேபிய அரசாங்கம் நன்கொடை வழங்கியது உண்மைதான் என்று சவூதி வெளியுறவு அமைச்சர் அதெல் அல்-ஜுபிர் தெரிவித்துள்ளார். "நன்கொடை வழங்கப்பட்டதை நாங்கள் அறிவோம். அது உண்மையிலேயே ஒரு நன்கொடைதான். எதையும் எதிர்பார்த்துக் கொடுக்கப்பட்டதல்ல.
"அவ்விவகாரத்தைத் தீர ஆய்வு செய்த மலேசிய அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரி அந்த விவகாரத்தில் தவறு எதுவும் நடக்கவில்லை என்ற முடிவுக்கு வந்திருப்பதையும் நாங்கள் அறிவோம்," என்று அதெல் அல்ஜுபிர் கூறினார். ‚ "எங்களைப் பொறுத்தவரை அது முடிந்துபோன விவகாரம்," என அதெல் நேற்று இஸ்தான்புல் நகரில் மலேசிய செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இஸ்தான்புல் நகரில் நடக்கும் 13வது உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ளும் அதெல், முன்னதாக நஜிப்புடன் இருதரப்புப் பேச்சுகளில் கலந்துகொண்டார்.