ஈப்போ: மலேசியாவின் ஈப்போவில் உள்ள ஸ்ரீ முனீஸ்வரர் அம்மன் கோயில் சிலைகளை உடைத்ததாக 29 வயது மருத்துவரான ஃபாத்தி முன்ஸிர் நட்ஸ்ரி மீது வெள்ளிக் கிழமை அன்று குற்றம்சாட்டப்பட்டது. சம்பவத்தின்போது பாராங்கத்தி போன்ற ஆபத்தான ஆயுதங்களை அவர் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் கோயில் சிலைகளை தாம் உடைக்கவில்லை என்று கூறியிருக்கும் அவர் மேல் விசாரணைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மாதம் 24ஆம் தேதி ஈப்போவில் உள்ள ஸ்ரீ முனீஸ்வரர் அம்மன் கோயிலில் நுழைந்த ஒருவர் அங்கிருந்த நவக்கிரக சிலைகளை உடைத்தார். இதனால் கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதனையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலிசார் ஃபாத்தி முன்ஸிர் நட்ஸ்ரியைக் கைது செய்தனர். இவருக்கு மனநிலை சரியில்லை என்று கூறப்பட்டதால் பஹாகியா மருத்துவமனையில் சோதனைக்கு உட்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
சந்தேக நபரை அழைத்துச் செல்லும் போலிசார். படம்: மலேசிய ஊடகம்