பெஷாவர்: தோழி தன் காதல னுடன் ஓடிப்போக உதவி செய்த ஒரு பாகிஸ்தானிப் பெண்ணை மருந்து உட்கொள்ளச் செய்து, கழுத்தை நெரித்து, எரித்துக் கொலைசெய்ததாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 20 வயதான அந்தப் பெண்ணை கிராமத் தலைவரின் ஆணைப்படி கடந்த மாதம் 29ஆம் தேதி வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள மகோல் கிராமத்தில் சுஸுகி வேனில் வைத்து எரித்துக் கொன்றதாகச் சொல்லப் படுகிறது. கொல்லப்பட்ட பெண்ணின் தோழி காதலருடன் ஓடிச்சென்ற போது அந்த வேனில் மறைந்திருந்ததால் அந்த வேனோடு பெண் எரிக்கப்பட்ட தாகக் கூறப்படுகிறது. இந்தக் கொலையைச் செய்யத் தூண்டிய 13 கிராமவாசிகளைக் கைது செய்துள்ளதாக மாவட்ட போலிஸ் தலைவர் குர்ரம் ரஷீது கூறியுள்ளார்.
கிராமத் தலைவர்களின் செயலை, கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயாரும் ஆதரித்ததால் அவரையும் போலிசார் கைது செய்துள்ளனர். குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றும் நோக்கில் பாகிஸ்தானில் நூற்றுக்கணக்கான பெண்கள் அவர்களது உறவினர்களால் கௌரவக் கொலை செய்யப் படுகின்றனர். 2005ஆம் ஆண்டு இத்தகைய கொலைகளைத் தடுக்கும் நோக்கில் பாகிஸ்தானின் குற்றவியல் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டாலும் கௌரவக் கொலைகள் தொடர்கின்றன. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், கௌரவக் கொலைகளை ஒழிக்க எண்ணம் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டாலும் புதிய சட்டங்கள் எதுவும் இயற்றப்பட வில்லை. இந்த வழக்கின் தொடர்பில் கைது செய்யப்பட்ட 14 பேரும் பயங்கரவாதத்துக்கு எதிரான நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப் படுவர்.