ஜகார்த்தா: இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து தென்சீனக் கடல் பகுதியில் சுற்றுக்காவல் பணியை மேற்கொள்ளவிருக்கின்றன. கடற்கொள்ளையர்களின் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படவிருக்கும் இந்தக் காவல் பணி, கடல் பகுதியில் ஏற்படும் அவசரத் தேவைகளுக்கும் விரைந்து செயல்படமுடியும் என இந்தோனீசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மர்சுடி நேற்றுத் தெரிவித்தார்.
மேலும் இந்தக் காவல் அமைப்புகளிடையே தகவல் பரிமாற்றத்தை எளிதாக்கும் பொருட்டு நேரடி தொலைபேசி இணைப்புகளும் இருக்கும் என திருவாட்டி ரெட்னோ குறிப்பிட்டார். மலாக்கா ஸ்ட்ரெய்ட்ஸ் சுற்றுக்காவலின் ஓர் அங்கமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தெற்கு பிலிப்பீன்ஸ், வடக்கு மோனியோ ஆகிய பகுதிகளில் அண்மையில் நிகழ்ந்த ஆட்கடத்தல் சம்பவங்களை அடுத்து இந்த மூன்று நாடுகளின் பிரதிநிதிகள் யோக்ஜகார்த்தாவில் சந்தித்துப் பேசியபோது இந்த விவரங்கள் வெளியிடப்பட்டன.