யங்கோன்: ஆங் சான் சூச்சி அம்மையாருக்காகப் புதிய அமைச்சை உருவாக்க மியன்மார் அதிபர் ஹிதின் கியாவ் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார். அதிபருக்கு இணையான அதிகாரம் கொண்ட ஆலோசகர் பொறுப்பில் இருந்து வரும் திருவாட்டி சூச்சியின் செல்வாக்கை அதிகரிக்கும் நோக்கில் புதிய அமைச்சு அமைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் திருவாட்டி சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி அபார வெற்றி பெற்றது.
இருப்பினும் அவரால் அதிபர் பொறுப்பை ஏற்க இயலாதபடி ராணுவ அரசாங்கம் இயற்றிய சட்டம் தடுத்துவிட்டது. தேசிய சமாதானத்தையும் உள்நாட்டு அமைதியையும் விரைவுபடுத்தும் சூச்சியின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் புதிய அமைச்சு ஏற்படுத்தும் யோசனை முன்வைக்கப்பட்டு உள்ளதாக 'குளோபல் நியூ லைட்' ஆங்கில செய்தித்தாள் நேற்று தெரிவித்தது. இந்த யோசனை குறித்து அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட இருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.