கெய்ரோ: கெய்ரோவின் தெற்குப் பகுதியில் உள்ள ஹெல்வன் என்னுமிடத்தில் சென்றுகொண்டிருந்த போலிஸ் வாகனம் ஒன்றின் மீது அடையாளம் தெரியாத நான்கு துப்பாக்கிக்காரர்கள் சரமாரியாகச் சுட்டதில் 8 போலிஸ்காரர்கள் கொல்லப்பட்டனர் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சு தனது ஃபேஸ்புக் இணையத் தளத்தில் தெரிவித்தது. தாக்குதலில் ஈடுபட்ட துப்பாக்கிக்காரர்கள் அனைவரும் முகமூடி அணிந்திருந்ததாக அப் பகுதியில் வாழும் சிலர் ராய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் கூறியதாகத் தெரிகிறது. இந்தத் தாக்குதலை எந்த பயங்கரவாதக் குழுக்களைச் சார்ந்தவர்கள் மேற்கொண்டனர் என்பது உடனடியாகத் தெரியவில்லை.
எகிப்து நாட்டின் சினாயின் வடக்குப் பகுதியைத் தளமாகக் கொண்டு இயங்கி வருகின்றனர் கிளர்ச்சியாளர்கள். இவர்கள் 2013ஆம் ஆண்டு முதல் ஏராளமான எகிப்திய ராணுவத்தினரையும் காவல்துறையினரையும் கொன்று குவித்துள்ளனர். சினாயில் நடந்த கொடூரத் தாக்குதலின்போது பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையைக் குறிவைத்து கெய்ரோவிலும் மற்ற நகரங்களிலும் வெடிகுண்டு வைத்தனர்.