ஜோகூர் பாரு: ஜோகூரில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்த போதிலும் அங்கும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு நீடிக்கவே செய்கிறது. ஜோகூரைச் சுற்றியுள்ள சில பகுதிகளிலும் பாசிர் கூடாங் வட்டாரத்திலும் இம்மாத இறுதியில் தண்ணீர் பங்கீடு முறை அமலுக்கு வரக்கூடும் என்று ஜோகூர் பொதுப் பணித்துறை மற்றும் நகர, வட்டார மேம்பாட்டுக் குழுவின் தலைவர் ஹாஸ்னி முகம்மது கூறியுள்ளார்.
தற்போது நிலவும் வறட்சியான நிலை தொடர்ந்தால் மெர்சிங்கில் உள்ள சோன்கோக் அணையில் உள்ள நீர், மக்களுக்கு விநியோகிப் பதற்கு இரண்டு வாரங்களுக்கு மட்டுமே போதுமானது என்று ஹாஸ்னி கூறினார். வானிலை ஆய்வு மையத்தை மட்டுமே சார்ந்திராமல் செயற்கை முறையில் மழை பெய்யச் செய்வதற் காக நிறுவனங்களை நாடுவது தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் அவர் சொன்னார். தண்ணீர் சுத்திகரிப்பு நிலைகளிலும் அணைக்கட்டு களிலும் தண்ணீர் தட்டுப்பாடு நீடிப்பதால் கோத்தா திங்கி மற்றும் மெர்சிங் பகுதிகளில் சில இடங்களில் மே 15ஆம் தேதிக்கு அப்பாலும் மேலும் ஒரு மாதத்திற்கு தண்ணீர்ப் பங்கீட்டு முறை நீட்டிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.