ஈப்போ: ஈராண்டுகளுக்கு முன்பு 239 பயணிகளுடன் காணாமல் போன மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH370ஐத் தேடும் பணி குறித்து ஆஸ்திரேலிய போக்கு வரத்து பாதுகாப்புப் பிரிவு மேற்கொள்ளும் முடிவை ஏற்றுக்கொள்ளப்போவதாக மலேசிய போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தேடுதல் பணியை முன்னிருந்து மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்புப் பிரிவின் தலைவர் ஜூலை மாதத்துக்குள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் இல்லையெனில் அந்த விமானத்தைத் தேடும் பணியை முடித்துக்கொள்ளப்போவதாக ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
120,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தேடுதல் பணி முடிவடைந்துவிட்டால் ஆஸ்திரேலியாவின் முடிவை ஏற்றுக் கொள்ளப்போவதாக மலேசியாவின் துணைப் போக்குவரத்து அமைச்சர் அப் அஸிஸ் கப்ராவி நேற்று குறிப்பிட்டார். தேடுதல் பணியை மேற்கொள்ள ஒப்புக்கொண்ட பரப்பளவில் 15,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு மட்டுமே எஞ்சியுள்ளது. 2014ஆம் ஆண்டு காணாமல் போன அந்த விமானத்தின் பாகங்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என ஆஸ்திரேலியாவின் ஏபிசி செய்தி நிறுவனம் தெரிவித்தது. இந்தியப் பெருங்கடலில் தேடுவதற்குத் தேர்ந்தெடுக் கப்பட்ட பரப்பளவு முழுவதும் தேடப்பட்ட பிறகு தேடுதல் பணியை முடித்துக்கொள்ள ஆஸ்திரேலியா, சீனா, மலேசியா ஆகிய நாடுகள் ஏற்கெனவே ஒப்புக்கொண்டிருந்தன.