சுபாங்: சிங்கப்பூரை நோக்கிப் புறப்பட்ட மலேசிய விமான நிறுவனம் ஒன்றின் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அந்த விமானம் சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டது. அதனால் அதில் பயணம் செய்தோர் நான்கு மணி நேரத் தாமதத்தை எதிர்நோக்கினர். நேற்று முன்தினம் இரவு 7.40 மணிவாக்கில் விமானம் சிங்கப்பூருக்குப் புறப்பட்டது. ஆனால் அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக இரவு 8 மணி அளவில் இரண்டு தொலைபேசி அழைப்புகளை விமான நிலையம் பெற்றது.
அதனைத் தொடர்ந்து விமானம் அவசரமாக 8.20 மணியளவில் தரையிறக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தை முழுமையாகச் சோதித்து அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என உறுதிப்படுத்தினர். அந்த விமானத்தில் இருந்த 30 பயணிகளும் நான்கு ஊழியர்களும் வேறொரு விமானத்தில் இரவு 11.40 மணியளவில் பயணத்தைத் தொடர்ந்தனர். இந்த போலி மிரட்டல் குறித்த விசாரணையை மலேசிய போலிசார் மேற்கொண்டுள்ளனர்.