கொழும்பு: இலங்கையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகப் பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் கொழும்பு உள்ளிட்ட 25 மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்து உள்ளது. மிக மோசமாக பாதிக்கப்பட்ட காலே மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கிப் புதையுண்ட 13 பேரின் சடலங்களை நேற்று முன்தினம் இலங்கை ராணுவத்தினர் மீட்டனர். ஆரன்யாகே பகுதியில் இருந்து 43 சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. 3,40,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்க இடமின்றித் தவித்து வருகின்றனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. இந்தியா அனுப்பிய விமானப்படை விமானம், இரண்டு கடற்படைக் கப்பல்கள் நேற்று முன்தினம் முதல் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஐக்கிய நாடுகள் அமைப்பு பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உறுதுணையாகவும் உதவி செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ஐநா தூதர் உனா மெக்கவுலி இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவைச் சந்தித்து அவசரத் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். இதற்கிடையே ரோனு புயலின் சீற்றத்தால் பங்ளாதேஷில் ஏற்பட்ட பாதிப்புக்கு 25 பேர் பலியாகி உள்ளனர். 538,000 பேர் பத்திர மான இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். சிட்டகாங்கில் மட்டும் 5,534 புயல் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.