கொழும்பு: இலங்கையில் சென்ற வாரம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களில் இன்னும் 100 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மண்ணில் புதையுண்ட பலர் உயிருடன் இருப்பதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை என்று மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் 67 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் ராணுவத்தினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாக பேரிடர் நிவாரண நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இலங்கையின் பல பகுதியில் சென்ற வாரம் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் இலங்கை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளைவிட்டு வெளியேறிய 600,000 பேரில் பெரும்பாலோர் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இலங்கை அரசாங்கம் அனைத்துலக நாடுகளின் உதவியை நாடியுள்ளது.