பியூனஸ்அய்ரிஸ்: அர்ஜெண்டினாவின் கடைசி சர்வாதிகாரி ரினால்டோ பிக்னன். இவர் 1970-ம் ஆண்டுகளில் பதவி வகித்தார். அப்போது இவருக்கு எதிராகப் போராடிய இடதுசாரிகளை ரகசிய நடவடிக்கையின் பேரில் கொன்று குவித்தார். ஏராளமானவர்கள் உருகுவே, பிரேசில், சிலி, பராகுவே மற்றும் பொலிவியாவுக்கு கடத்தப்பட்டு அங்கு கொலை செய்யப்பட்டனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ரினால்டோ பிக்னன் மற்றும் 4 ராணுவ தளபதிகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீதான வழக்கு கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கியது. வழக்கு விசாரணை சுமார் 3 ஆண்டுகளாக நடந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில் சர்வாதிகாரி ரினால்டோ பிக்னனுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.