தோக்கியோ: ஜப்பானில் அடர்ந்த காட்டுக்குள் தனியாக விடப்பட்ட ஏழு வயதுச் சிறுவன் ஒருவன் ஒரு வாரத்திற்குப் பின்பு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான். ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் வசிக்கும் தம்பதியர் தன் மகன் யமாட்டோ டனூக்காவுடன் காட்டுப் பாதை வழியாக வந்துகொண்டிருந்தபோது அச்சிறுவன் அந்த வழியாக வந்த வாகனங்கள் மீதும் மக்கள் மீதும் கற்களை வீசி குறும்புத்தனம் செய்தான் என்பதற்காக அவனைத் தண்டிக்கும் விதமாக அவனை தனியாக காட்டில் விட்டுச் சென்றனர். பின்னர் ஐந்து நிமிடம் கழித்து அங்கு சென்று பார்த்தபோது யமாட்டோவைக் காணவில்லை.
பின்னர், காவல்துறையிடம் அவர்கள் புகார் செய்தனர். இதையடுத்து நூற்றுக்கணக்கான மீட்புப்படையினருடன் போலிசாரும் ராணுவ வீரர்களும் காட்டில் சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அச்சிறுவன் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டதாக ஜப்பான் ராணுவம் அறிவித்துள்ளது. கடும் குளிரில், காட்டுக்குள் சுற்றித்திரிந்த யமாட்டோ, கண்ணில் தென்பட்ட ஒரு குடிசைக்குள் நுழைந்து அங்கிருந்த தண்ணீரைக் குடித்து வந்ததாகக் கூறப்பட்டது. ராணுவப் பயிற்சிப் பகுதியில் உள்ள அந்தக் குடிசையில் படுத்துறங்கிய சிறுவனை ராணுவ வீரர் ஒருவர் பார்த்ததைத் தொடர்ந்து அவன் மீட்கப்பட்டான். அச்சிறுவனின் தந்தை தன் செயலால் ஏற்பட்ட தொல்லைகளுக்கு மகனிடமும் மீட்புக் குழுவினரிடரும் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.
யமாட்டோ டனூக்கா. படம்: ஏஎஃப்பி