ஹனோய்: வியட்னாமின் கடற்கரைகளில் இரு மாதங் களுக்கு முன்பு மீன்கள், கடல்வாழ் உயிரினங்கள் பல செத்து கரையொதுங்கியது தொடர்பான விசாரணையை ஒளிவுமறைவின்றி நடத்தக் கோரி நேற்று ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய பலர் ஹனோய், ஹோ சி மின் சிட்டியில் கைது செய்யப்பட்டனர். இவ்விரு நகரங்களின் தெருக்கள் நேற்று வெறிச்சோடியிருந்தாலும் சமூக வலைத்தளங்களின் வழியாகக் கைது குறித்த தகவல்கள் பரவின.
'ஃபார்மோசா' எனும் தைவானிய நிறுவனம் வியட்னாமில் நடத்தும் இரும்பு ஆலைக்கு அருகே மீன்கள் இறந்ததால் அந்த நிறுவனமே மீன்களின் இறப்புக்குக் காரணம் என ஆர்ப்பாட்டக்காரர்களால் நம்பப்படுகிறது. "விசாரணை கோருவோரிடம் அடக்குமுறையைக் கையாளுவதை விடுத்து மீன்கள் இறந்துபோனதற்கான காரணம் குறித்து அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும்," என வியட்னாமின் மனித உரிமைகள் கண்காணிப்பு அதிகாரி ஃபில் ராபர்ட்சன் கூறியுள்ளார்.