சிட்னி: ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் கடந்த சில நாட் களாக கனமழை பெய்வதுடன் பலத்த புயல் காற்றும் வீசுகிறது. கடும் புயலில் சிக்கி மூவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். நியூ சவுத்வேல்ஸ், விக்டோரியா, டாஸ்மேனியா ஆகிய இடங்களில் பெய் யும் கனமழை காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிட்னி கடற்கரை ஓரத்தில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பு காரணமாக பல மில்லியன் டாலர் மதிப்புள்ள வீடுகள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சென்ற வார இறுதியில் சுமார் 86,000 பேர் மின்சாரம் இன்றி தவிக்க நேர்ந்தது. இடைவிடாது பெய்யும் கனமழை காரணமாக பல இடங்களில் ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடுவதாகவும் கேன்பரா அருகே உள்ள ஓர் ஆற்றில் நேற்று ஒருவரின் சடலம் மிதந்ததாகவும் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 37 வயதான ஒருவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் போலிசார் கூறினர். மேலும் இரு இடங்களில் இரு ஆடவர்களின் சடலங்களை முக்குளிப்பாளர்கள் மீட்டனர். ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு அபாய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடலோரப் பகுதியில் பலத்த புயல்காற்று வீசும் வேளையில் சிட்னி கடற்கரையில் கடல் அலைகளின் சீற்றம் அதிகரித்துள்ள நிலையில் அங்குள்ள நீச்சல் குளமும் வீடுகளும் சேதம் அடைந்துள்ளன. படம்: ராய்ட்டர்ஸ்