பெய்ஜிங்: ஆசிய பசிபிக் வட்டாரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் பரஸ்பர அக்கறை இருப்பதாகக் கூறிய சீன அதிபர் ஸி ஜின்பிங், இரு நாடுகளும் ஒத்துழைக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். முதலில் அவ்விரு நாடுகளும் பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். பெய்ஜிங்கில் நேற்று தொடங்கிய அமெரிக்கா=சீனா கலந்துரையாடல் மாநாட்டில் திரு ஜின்பிங் உரையாற்றினார். தென்சீனக் கடல் பிரச்சினை தொடர்பில் அமெரிக்காவுக்கும் சீனாவுக் கும் இடையே பதற்றம் நீடிக்கும் வேளையில் அந்தப் பதற்றத்தைத் தணிக்கும் விதமாக சீன அதிபரின் உரை அமைந்துள்ளது.
அமெரிக்காவும் சீனாவும் முதலில் அவற்றின் வேறுபாடுகளைக் களைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பரஸ்பர மரியாதை, சமத்துவம் அடிப்படையில் இரு நாடுகளும் வேறுபாடுகளுக்கும் உணர்வுபூர்வமான விவகாரங்களுக்கும் தீர்வு காண வேண்டும் திரு ஜின்பிங், மாநாட்டில் வலியுறுத்தியதாக சின்ஹுவா தகவல் தெரிவித்தது. இரு நாடுகளுக்கும் இடையே வேறுபாடு ஏற்படும்போது எந்த நாடும் மோதல் போக்கைப் பின்பற்றக்கூடாது என்றும் சீன அதிபர் கேட்டுக்கொண்டார். சில பிரச்சினைகளுக்கு தற்போது தீர்வு காண முடியாது என்று கூறிய திரு ஜின்பிங், அமெரிக்காவும் சீனாவும் ஒன்று மற்றதன் உண்மையான நிலவரத்தை கருத்தில்கொள்ள வேண் டும் என்றும் சரியான அணுகு முறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பெய்ஜிங் வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியை சீன அதிபர் ஸி ஜின்பிங் சந்தித்துப் பேசுகிறார். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளுக்கு இரு நாடுகளும் புரிந்துணர்வு அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்று சீன அதிபர் வலியுறுத்தினார். படம்: ராய்ட்டர்ஸ்