பாரிஸ்: பிரான்சில் யூரோ 2016 காற்பந்துப் போட்டி தொடங்கியுள்ள வேளையில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் ஈடுபட வேண்டாம் என்று பிரெஞ்சு அதிபர் ஹொலாண்ட் எச்சரித்துள்ளார். தொழிலாளர் சட்டத்தில் அரசாங்கம் செய்துள்ள சீர்திருத்த மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் பிரான்சில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ரயில்வே ஊழியர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுமாறு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் பாரிஸ் நகரில் துப்புரவுப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பல இடங்களில் குப்பைகள் குவிந்து காணப்படுகின்றன. பாரிசில் காற்பந்து ரசிகர்கள் திரண்டிருக்கும் வேளையில் குப்பைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்படும் என்று அதிபர் அறிவித்துள்ளார்.