லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிந்து செல்வதற்குச் சாதகமாக வாக்கெடுப்பு முடிவுகள் இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, பிரிட்டிஷ் பவுண்டின் மதிப்பு 31 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சரிந்தது. பிரிட்டன் பிரிந்து செல்வதை ஆதரித்து 51.9 விழுக்காட்டு வாக்குகளும் ஐரோப்பிய ஒன்றியத் துடன் தொடர்ந்து இணைந்திருப்பதை ஆதரித்து 48.1% வாக்குகளும் பதிவாகின. 28 நாடுகளின் கூட்டான ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டுப் பிரிந்து செல்லும் முதல் நாடு பிரிட்டன். அதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது குறித்து பலவிதமான மாறுபட்ட கருத்துகள் நிலவுவதை அடுத்து பிரிட்டனைச் சேர்ந்த வர்த்தகங்களின் பங்கு விலைகளும் சரிந்தன.
பாதிக்குச் சற்று அதிகமானோர் நேற்றைய தினத்தை சுதந்திரதினமாகக் கொண்டாடினா லும் மறுசாரார் இந்த முடிவைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன் எதிர்காலம் பற்றிய பயத்தில் ஆழ்ந்தனர். மத்திய, வடக்கு இங்கிலாந்து வாக்காளர்கள் பிரிட்டன் பிரிந்து செல்வதை ஆதரித்ததே இந்த முடிவு எட்டப்படுவதற்குக் காரணம் என வாக்கு எண்ணிக்கை யின்போது அறியப்பட்டது. ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிந்து சென்றால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி பொருளியல் வல்லுநர்கள் எச்சரித்திருந்த போதும் அவை சிறிய அளவு தாக்கத்தையே ஏற்படுத்தியிருப்பது வாக்குகளில் தெளிவானது.
ஐரோப்பிய ஒன்றியம், காமன்வெல்த் ஆகியவற்றைச் சேர்ந்த பிரிட்டன்வாசிகளுக்கும் இந்த முடிவு ஏமாற்றத்தையே தந் துள்ளது. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் பதவி விலகப்போவதாக அறிவித்ததை அடுத்து, அக்டோபர் மாத வாக்கில் அமையவிருக்கும் புதிய அரசில் லண்டனின் முன்னாள் மேயர் போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படலாம் எனக் கூறப்படுறது. அதுவரை பிரிட்டனின் நிலைத்தன்மைக்காக பாடு படப்போவதாக கேமரன் அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிந்து சென்றதை சாதாரணமாகக் கருதக்கூடாது எனவும் அது ஐரோப்பிய ஒன்றியத்தில் மேலும் பிளவுகளை ஏற்படுத்திவிடக்கூடிய அபாயத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தப் பிரிவு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஒரு பேரிடி என்று குறிப்பிட்ட அவர் ஒன்றியத்தில் இருக்கும் மற்ற 27 நாடுகளும் செயல்பாடுகளையும் தாக்கங்களையும் நன்கு ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது அவசியம் என்றும் கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் நாடுகள் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுமானால் ஒன்றியத்தில் மறுசீரமைப்பு அவசியம் என இத்தாலிய பிரதமர் மேட்டியோ ரென்ஸி கூறினார். ஜெர்மன் அதிபர், பிரெஞ்சு அதிபர், இத்தாலிய பிரதமர், ஐரோப்பிய மன்றத் தலைவர் ஆகிய தலைவர்கள் நாளை மறுதினம் பெர்லினில் சந்தித்து பிரிட்டனின் இந்த முடிவு குறித்து கலந்தாலோசிக்க உள்ளனர்.
உலகின் ஐந்தாவது பெரிய பொருளியல் நாடான பிரிட்டன் பிற நாடுகளுடன் வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதற்கு சில காலம் பிடிக்கும் என்பதால் வர்த்தகர்களிடையே நிலவிய அச்சத்தால் பங்குச்சந்தையில் பலர் பிரிட்டிஷ் பவுண்டுகளையும் பங்குகளையும் விற்க முயன்றனர். பிரிட்டன் வர்த்தகத் தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்து உதவிகள் எதுவும் செய்யாது என்று ஐரோப்பியக் குழுவின் தலைவர் ஜீன் க்ளாட் ஜங்கர் கூறியுள்ளார். உலக அளவில் பிரிட்டன் தன் வர்த்தகத்தை வலுப்படுத்திக்கொள்ள பத்து ஆண்டுகள் வரை ஆகலாம் என கவனிப்பாளர்கள் கருத்துரைத்துள்ளனர்.
அடுத்த ஆண்டில் பிரிட்டனின் பொருளியல் நிலைமை மோசமாகக்கூடும் எனவும் அது 5.6% வரை சரிவைச் சந்திக்கும் எனவும் அனைத்துலக பண நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளாது. மேலும் வேலையில்லாதோர் விகிதம் 6% வரை உயரும் எனவும் கூறப்படுகிறது. பிரிட்டனிலிருந்து ஆயிரக்கணக்கான வேலைகள் ஃப்ராங்ஃபர்ட், பாரிஸ் போன்ற நகரங்களுக்கு மாற்றப்படும் என நிறுவனங்கள் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்தன. புதிய பொருளியல் கொள்கைகளால் வர்த்தக உலகம் வெகு விரைவாக சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் என பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்வதை ஆதரிக்கும் குழுவினர் கூறு கின்றனர்.
பிரிட்டன் ஐரோப்பாவுடன் தொடர்ந்து நீடித்திருப்பதை ஆதரிப்போர் மத்திய லண்டனில் உள்ள லெக்ஸ்டிங்கன் மதுக் கூடத்தில் கூடியிருந்தனர். முடிவுகளை அறிந்து பிரிட்டனின் எதிர்காலம் எவ்வாறிருக்குமோ என்ற அச்சத்தை வெளிப்படுத்தினர். படங்கள்: என்வைடி