வாஷிங்டன்: அமெரிக்காவின் வெர்ஜினியா மாநிலத்தில் பெய்த கனமழையில் சிக்கி இதுவரை 23 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு வெர்ஜினியாவில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழை அளவு 25 செ.மீட்டர் என பதிவாகியிருப்பதால் இங்குள்ள முக்கிய ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் நீர்த் தேக்கங்களில் நீர் நிரம்பி வழிகிறது. இதனால் நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
எல்க் ஆற்றின் நீர்மட்டம் கடந்த 1888-ம் ஆண்டுக்குப் பின்னர் 32 அடியாக உயர்ந்தது. இதனால் மாநிலத்தின் கிரீன்பிரியர் பகுதியில் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மூன்று மாதங்கள் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததால் வீடுகளுக்குள் சுமார் எட்டு முதல் பத்து அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.