பாரிஸ்: சர்ச்சைக்குரிய தொழிலாளர் சீர்திருத்தத்திற்கு எதிராக பாரிசில் வேலை நிறுத்தப் போராட்டம் நீடிக்கும் வேளையில் ஐஃபல் கோபுர ஊழியர்களும் அப்போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் ஐஃபல் கோபுரம் நேற்று மூடப்பட்டதாக அக்கோபுர நடத்துநர் கூறியுள்ளார். அக்கோபுரத்தைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க போதுமான ஊழியர்கள் இல்லாத காரணத்தால் நேற்று அக்கோபுரம் மூடப்பட்டதாக அவர் சொன்னார்.
இரண்டு வாரங்களில் இரண்டாவது தடவையாக ஐஃபல் கோபுர ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியதாகக் கூறப்படுகிறது. அரசாங்கம் வலுக்கட்டாயமாக அறிமுகப்படுத்திய தொழிலாளர் சீர்திருத்த சட்டத்திற்கு அங்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபடுமாறு பல்வேறு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்து வருகின்றன.
ஐஃபல் கோபுரத்திற்கு அருகே பாதுகாப்புப் பணியில் பிரெஞ்சு படையினர் ஈடுபட்டுள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்