விமான நிலையங்களில் பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும்போது பாதுகாப்புப் படையினர் மின்னல் வேகத்தில் செயல்பட வேண்டும். இல்லையெனில் இஸ்தான்புல், பிரசல்ஸ் ஆகிய நகரங்களில் ஏற்பட்ட நிலைமைதான் ஏற்படும் என்று அனைத்துலக விமான நிலைய பாதுகாப்பு வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார். இஸ்தான்புல்லில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தொடக்கத்திலேயே துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதே அவர்களது தந்திரமாக இருந்தது. இந்த நேரத்தில் பாதுகாப்புப் படையினர் மின்னல் வேகத்தில் செயல்பட்டிருந்தால் பயங்கரவாதிகளை உடனே சுட்டு வீழ்த்தி இருக்கலாம்.
இத்தனை உயிர்களைப் பலி கொடுத்திருக்க வேண்டாம் என்று பாதுகாப்பு வல்லுநர் ரஃபி ரோன் கூறினார். இவர் டெல் அவிவ் பென் குரியன் அனைத்துலக விமான நிலையத்தில் பாதுகாப்புத் துறைத் தலைவராகப் பணியாற்றியவர். "தற்காப்புத் தந்திரங்களை நான் வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை. மின்னல் வேகத்தில் செயல்பட்டு இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு ஏராளமான வழிகள் உள்ளன," என்று அவர் கூறினார். "பயங்கரவாதிகளின் முக்கிய இலக்காக விமான நிலையங்கள் உள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன் மாஸ்கோவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.
வியன்னா, பாரிஸ், ரோம் ஆகிய நகரங்களில் 1970ல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதுபோன்ற தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த நிறைய வழிகள் உண்டு என்கிறார் டெல்அவிவ் விமான நிலையத்தில் இப்போதுள்ள பாதுகாப்புக் கட்டமைப்பு அமைவதற்குக் காரணமான திரு ரோன். மேற்கத்திய நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதலை முறியடிக்கும் கட்டுக்கோப்பான பாதுகாப்பு முறை வழக்கமாகக் கடைப்பிடிக்கும் பாதுகாப்பு முறையில்லை. தாக்குதல் அபாயம் உள்ள இடங்களில் பாதுகாப்புத் தந்திரங்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. பாக்தாத் அனைத்துலக விமான நிலையத்தில் அரசு சாராதவர்களின் வாகனங்கள் நிலையத்தின் முனையங்களுக்கு ஓட்டிச் செல்ல அனுமதியில்லை.