சிட்னி: ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் யார் வெற்றி பெறுவார் என்பது இன்னமும் உறுதியாகத் தெரியவில்லை. அதிகாரபூர்வ தேர்தல் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆளும் கூட்டணிக் கட்சிக்கும் எதிர்கட்சியான தொழிற்கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதால் அங்கு தொங்கு நாடாளுமன்றம் அமையும் சாத்தியம் உள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் மீண்டும் ஆட்சி அமைக்க முடியும் என்று தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் கூறியுள்ளார். அஞ்சல் மூலம் 1.5 மில்லியன் பேர் வாக்களித்துள்ள நிலையில் அந்த வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற கீழ் அவையில் பெரும்பான்மை வகிக்க முக்கிய கட்சிகளுக்கு 76 இடங்கள் தேவை. இந்நிலையில் இந்தப் பெரும்பான்மையைப் பெற முடியும் என்று தான் நம்பிக்கை கொண்டுள்ளதாக திரு டர்ன்புல் கூறினார்.