இளம்பெண் உட்பட இரு மலேசிய இந்தி யர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கோலாலம்பூரில் அரங் கேறியுள்ளது. கொல்லப்பட்டோ ரில் ஒருவரான மைதுரி ராஜா, 23 (படம்), மிகவும் நல்ல பெண் என்றும் கருணை மிக்கவர் என்றும் சிகே8 என்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட அவரது நண்பர் கூறினார். கடந்த வியாழனன்று அதிகாலை 3.30 மணிக்கு தம் தோழி கொலை செய்யப்பட்டார் என்று தொலைபேசி வழியாகத் தமக்குத் தகவல் கிட்டிய தாக 22 வயது சிகே8 சொன்னார். உடனடியாக மைதுரியின் கைபேசி எண்ணிற்குத் தாம் அழைத்ததாகவும் அவரது கைபேசியை எடுத்த அடை யாளம் தெரியாத நபர் ஜாலான் டுட்டமஸில் உள்ள ஒரு கேளிக்கை விடுதிக்கு வெளியே நிகழ்ந்த அச் சம்பவம் குறித்து விவரித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
முன்பின் தெரியாதவர்களிடம் மைதுரி உடனே நெருங்கிப் பழகிவிட மாட்டார் என்றும் அவர் சற்று கூச்ச சுபாவம் உடையவர் என்றும் குறிப்பிட்ட சிகே8, அவர் ஒரு பெண் என்பதை நினைத்தாவது தாக்குதல் காரர்கள் அவரிடம் சற்று கருணை காட்டியிருக்கலாம் என்றும் வேதனை யுடன் கூறினார். காசாளராகப் பணியாற்றிய மைதுரியுடன் கேளிக்கை விடுதி ஊழியரான மோகன் எம்.சந்திரன், 21, என்பவரும் வெட்டிக் கொலை செய்யப் பட்டார். ஆலன் என்று சொல்லப்படும் இன்னொரு 26 வயது ஆடவர் தலை, இடது உள்ளங்கை, வலது கணுக்காலில் கடுமையான வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்ற புதன்கிழமை இரவு 11 மணிக்கு நிகழ்ந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத் தின் பேரில் அறுவர் கைது செய்யப் பட்டுள்ளதாக செந்துல் துணை போலிஸ் ஆணையர் ஆர்.முனுசாமி தெரிவித்தார். அத்துடன், மூன்று முகமூடிகளும் ஐந்து பாராங்கத்தி களும் கைப்பற்றப்பட்டன. "பழிவாங்கும் நோக்கத்துடனே இந்தப் படுகொலைகள் நிகழ்ந்திருக் கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது," என்று திரு முனுசாமி குறிப்பிட்டார். முகமூடி அணிந்த ஆடவர்கள் இரு வாகனங்களில் இருந்து இறங்குவதையும் அவர்களில் ஒருவர் கேளிக்கை விடுதிக்கு முன்புறம் அமர்ந்திருந்த மைதுரியையும் சந்தி ரனையும் தாக்குவதையும் சிசிடிவி காணொளி காட்டுகிறது. மற்றவர்கள் அந்த விடுதிக்குள் புகுந்துவிட்டனர். தாக்குதலுக்குப் பின் அந்தச் சந் தேக நபர்கள் அனைவரும் தாங்கள் வந்த வாகனங்களில் ஏறி அந்த இடத்தைவிட்டுத் தப்பிச் சென்றனர்.