நீஸ்: தெற்கு பிரான்சில் உள்ள நீஸ் நகரில் லாரி ஏற்றி 84 பேரைப் படுகொலை செய்த பாதகச் செயலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அந்தச் சம்பவத்தின் தொடர்பில் மூவரை போலிசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவருக்கு தொடர்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாகச் செயல்படும் அமாக் செய்தி நிறுவனம் அதன் 'டெலிகிராம்' கணக்கில், "நீஸ் நகரில் பொதுமக்களை லாரி ஏற்றிக் கொன்ற ஆள் ஐஎஸ் அமைப்பின் போராளி," என்று குறிப்பிட்டுள்ளது. ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவளிப்போரைக் குறிவைத்து தாக்குமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அது தெரிவித்துள்ளது. தாக்குதலில் மாண்டுபோன 84 பேரில் 10 பேர் குழந்தைகள். காயமுற்ற 202 பேரில் 52 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தாக்குதலுக்கு ஐஎஸ் பொறுப்பேற்றிருப்பதன் தொடர்பில் விசாரணை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்ற வியாழக்கிழமை இரவு 'பேஸ்டில்' தினத்தன்று நீஸ் நகரில் கூட்டத்தினர் மீது லாரியை ஏற்றிக் கொன்ற 31 வயது டுனீசியரான முகமது லாஹௌயேஜ் பௌஹ்லெல் இஸ்லாமியத் தீவிரவாதத்துடன் தொடர்பு டையவரா என்று போலிசார் ஆராய்ந்து வருகின்றனர். பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பௌஹ்லெலின் மனைவி, நெருங்கிய நண்பன் ஆகிய இருவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். அந்நகரின் மத்திய ரயில் நிலையத்தின் அருகே அமைந்துள்ள சிறிய அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மூன்று பிள்ளைகளின் தந்தை
84 பேரின் உயிரைப் பலிகொண்ட பயங்கரவாதத் தாக்குதலை நிகழ்த்திய லாஹௌயேஜ் பௌஹ்லெல்லுக்கு
3 பிள்ளைகள் இருந் தாலும் மனைவி, பிள்ளைகளைப் பிரிந்து தனியாக வாழ்ந்துவந்தான். 2005 முதல் பிரான்சில் வசிக்கும் அவன் நிரந்தரவாசத் தகுதி பெற்றிருந்தான். மிரட்டல், வன்முறை, திருட்டு போன்ற சிறிய குற்றங்கள் புரிந்த பௌஹ்லெல்லுக்கு தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு இருந்ததாகத் தெரியவில்லை என டுனீசிய பாதுகாப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. "பார்ப்பதற்கு பயங்கரமாக இல்லாவிட்டாலும் அவனது பார்வை பயங்கரமாக இருக்கும். சிறுவரை அவன் வெறித்துப் பார்ப்பான்," என அவனது அண்டைவீட்டுப் பெண்மணி தெரிவித்துள்ளார்.