பாரிஸ்: பிரான்சில் நீஸ் நகரில் பலரின் உயிரைப் பறித்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் மேலும் இருவரை போலிசார் கைது செய்துள்ளனர். அல்பேனிய நாட்டவர் ஒருவரும் ஒரு பெண்ணும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். நீஸ் நகரில் கூட்டத்தினர் மீது லாரியை மோதி பலரை கொன்று குவித்த முகம்மது லாஹூயிஜி என்பவனுடன் அந்த இருவருக்கும் தொடர்பு இருந்ததாக நம்பப்படுகிறது.
அவ்விருவரும் அந்த பயங்கரவாதிக்கு ஆயுதங்கள் வழங்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அத்தாக்குதல் தொடர்பில் பிரெஞ்சு அதிகாரிகள் ஏற்கெனவே ஐந்து பேரை கைது செய்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு நீஸ் நகரில் நடந்த தாக்குதலில் 84 பேர் உயிரிழந்தனர்.
சுமார் 300 பேர் காயம் அடைந்தனர். அத்தாக்குதலுக்கு ஐஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள போதிலும் அத்தாக்குதலில் ஈடுபட்டவனுக்கு ஐஎஸ் தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று பிரெஞ்சு உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்தாக்குதலைத் தொடர்ந்து பிரான்சில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.