ஜப்பானில் நேற்று அதிகாலையில் கொடூரமான கத்திக் குத்துத் தாக்குதல் நடந்தது. இதில் 19 பேர் கொல்லப்பட்டனர். 25 பேர் படுகாயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களில் 10 பெண்களும் அடங்குவர். டோக்கியோவின் புறநகர்ப்பகுதியில் இயலாதோருக்கான பராமரிப்பு இல்லம் ஒன்றில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ஜப்பானில் போருக்குப் பிறகு நடந்த கொடூரமான சம்பவம் இது எனக் கூறப்படுகிறது. 'சுகி யமாயுரி=என்' என்று அழைக்கப்படும் அந்த இல்லம் டோக்கியோவின் தென்மேற்குப் பகுதியில் 50 கி.மீ தொலைவிலுள்ள சகாமிகாரா நகரத்தில் உள்ளது. அதிகாலை சுமார் 2.30 மணிக்கு இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததாக அவ் வட்டார காவல்துறை தெரி வித்தது.
இந்தத் தாக்குதலுக்கும் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கும் தொடர்பு இருப்பதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை என அந்நாட்டு நாடாளுமன்றத் தலைமைச் செயலாளர் யோஷிஹிடே சுகா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார். "இயலாதோர் இல்லத்தில் யாதும் அறியா அப்பாவிகள் மீது நடத்தப்பட்ட இந்தக் கொடூரமான தாக்குதல் நெஞ்சைப் பிழிய வைக்கும் வகையில் அதிர்ச்சியாக உள்ளது," என்று மேலும் அவர் கூறினார். இந்தக் கொலைகளை நிகழ்த்தியவர் என சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 26 வயது ஆடவர், அந்த இல்லத்தின் முன்னாள் பணியாளன். அவன் தானே முன்வந்து காவல்துறையிடம் காலை 3.00 மணிக்கு சரணடைந்தான். அப்போது அவன் கறுப்பு டி=சட்டை அணிந்திருந்தான். "நான்தான் அவர்களைக் கொன்றேன். உலகத்தில் உள்ள அனைத்து இய லாதோரையும் துடைத்தொழித்து விட்டால் நன்றாக இருக்கும்," என்று கூறினான்.
சட்டோஷி உயமட்சு என்ற அந்த ஆண், கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒரு கடிதம் எழுதியிருந்தான். அக்கடிதத்தில் "நான் அந்த இயலாதோர் பராமரிப்பு இல்லத்தில் உள்ள 470 பேரையும் துடைத்தொழிக்கப் போகி றேன்," என்று மிரட்டியிருந்தார் என கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.