பிரான்சின் வடக்குப் பகுதியின் ரூவன் நகரிலுள்ள ஒரு தேவாலயத்தில் அடையாளம் தெரியாத இருவரால் பிணையாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த பாதிரியார் மீட்பு நடவடிக்கையின்போது கொல்லப்பட்டு விட்டதாக பிரான்ஸ் காவல்துறை வட்டாரம் தெரிவித்தது. பிணை பிடித்து வைத்திருந்த அந்த இரண்டு பேரும் யார் என்பதும் அவர்களது நோக்கம் என்ன என்பதும் இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. காவல்துறையின் அதிரடி நடவடிக்கையின்போது ஏற்பட்ட தாக்குதலில் அந்த பாதிரியார் உயிரிழந்ததாக பிரான்சின் உள்துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். பிணை பிடிக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர் பாதிரியார் என்றும் அவர் பிளேடால் கழுத்தறுக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாகவும் காவல் துறை வட்டாரம் தெரிவித்தது. மற்ற ஐந்து பிணையாளிகளும் கடுமையாகக் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பிணை பிடிக்கப்பட்டிருந்தவர்களில் கிறிஸ்தவப் பெண் துறவிகள் இருவரும் அடங்குவர். தாக்குதல் நடவடிக்கையின்போது பிணை பிடித்தவர்கள் இருவரும் வெளியில் தப்பிக்க முயன்றபோது காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிரஞ்சு அதிபர் ஃபிரான்காய்ஸ் ஹாலண்டேயும் உள்துறை அமைச்சர் பெர்னர்ட் கஜிநியுவும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். "தேவாலயத்தில் இதுபோன்ற சம்பவம் காட்டுமிராண்டித்தனமான ஒன்று என்று சாடியுள்ளார் அந்நாட்டின் பிரதமர் மானுவல் வால்ஸ். பிரான்சின் தேசிய நாளின் போது நீஸ் நகரில் கூட்டமான பகுதியில் ட்ரக் வாகனம் வேகமாக செலுத்தப்பட்டதில் 84 பேர் கொல்லப்பட்டதோடு 300க்கு அதிகமானோர் காயமடைந்தனர். இது நிகழ்ந்து இரண்டு வாரத்தில் தேவாலய பிணை பிடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.