கோலாலம்பூர்: மலேசியாவில் அமலுக்கு வந்துள்ள தேசிய பாதுகாப்பு மன்றச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை தடுக்கக் கோரி முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அன்வாரின் வழக்கறிஞர்களான என்.சுரேந்திரன், ஆர்.சிவராசா மற்றும் லத்தீபா ஆகியோர் தாக்கல் செய்தனர். அந்தச் சட்டம் அனுமதிக்கும் அதிகாரத்தை தேசிய பாதுகாப்பு மன்றம் பயன்படுத்தாமல் தடுக்க நீதிமன்றத் தடையுத்தரவைப் பெறும் முயற்சியிலும் அவர் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மனு தாக்கல் செய்ய அன்வாருடன் நீதிமன்றத்திற்கு சென்றிருந்த அவரின் மனைவியும் எதிரணித் தலைவருமான வான் அசிசா, "தேசிய பாதுகாப்பு மன்ற சட்டத்தினைத் தடுக்க வேண்டியது அவசியம் என்பதால், அதனைத் தடுக்க எதிர்க்கட்சி ஏதாவது செய்யும். அரச ஆட்சியாளர் மன்றம் இந்தச் சட்டத்திற்கு மறுப்புத் தெரிவித்து மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டும் அரசாங்கம் அதனைக் கருத்தில் கொள்ளவில்லை," எனக் கூறினார். தேசிய பாதுகாப்பு மன்ற சட்டம் கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த சட்டம் திங்கட்கிழமை அமலுக்கு வந்தது.