டமாஸ்கஸ்: சிரியாவில் அலெப்போ நகரைக் கைப்பற்ற அரசாங்கப் படையினரும் போராளிகள் தரப்பினரும் கடுமை யாகச் சண்டையிட்டு வரும் வேளையில் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் குளோரின் வாயு (விஷவாயு) கொள்கலன்கள் வீசப்பட்டன. அதிலிருந்து வெளியான விஷவாயு தாக்கி 33 பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள தாகவும் அவர்களில் பெரும் பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர் என்றும் சிரியா மீட்புச் சேவை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விஷவாயு வெளியானதில் பாதிக்கப்பட்டோர் மூச்சுவிட சிரமப்படுவதையும் அவர்களுக்கு முகமூடி வழியாக ஆக்சிஜன் செலுத்தப்படுவதையும் காட்டும் வீடியோ 'யுடியூப்' இணையத் தளத்தில் வெளி யிடப்பட்டுள்ளது. இந்த விஷவாயுத் தாக்குதலுக்கு சிரியா அதிபர் ஆசாத்தே காரணம் என்று கூறப்பட்ட நிலையில் அவர் அதை மறுத் துள்ளார். விஷவாயு கொள்கலன் களை, ரஷ்ய ராணுவ ஹெலி காப்டர் வீசியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சிரியாவில் உள்நாட்டுப் போருக்கு முன்பு அந்த நாட்டின் வர்த்தக மையமாக விளங்கிய அலெப்போ நகரில் 2012-ஆம் ஆண்டு முதல் கடும் சண்டை நடந்து வருகிறது. அந்த நகரின் மேற்குப் பகுதியை அரசுப் படையினரும் கிழக்குப் பகுதியை போராளிகளும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அந்நகரின் கிழக்குப் பகுதியை தங்கள் வசம் கொண்டுவர அரசாங்கப் படை யினர் கடந்த சில வாரங்களாக முற்றுகையிட்டுள்ளனர்.
இதனால் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட் கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சிரியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. போரில் ஏராளமானோர் பலியாகினர். ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டைவிட்டு வெளியேறினர். அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ரஷ்யா உதவி வருகிறது.