வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிபராவதற்கு டோனல்ட் டிரம்ப் தகுதி இல்லாதவர் என்று கூறிய அதிபர் ஒபாமா, டிரம்பிற்கு குடியரசுக் கட்சியினர் கொடுத்த ஆதரவையும் அங்கீகாரத்தையும் மீட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். டிரம்ப் அதிபர் வேட்பாளர் ஆவதற்கு அங்கீகாரம் வழங்கிய குடியரசுக் கட்சித் தலைவர்கள் அந்த அங்கீகாரத்தை அவசியம் மீட்டுக்கொள்ள வேண்டும் என்று திரு ஒபாமா கேட்டுக்கொண்டார். வெர்ஜினியா புறநகர் பகுதியில் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது வெள்ளை மாளிகையில் பேசிய திரு ஒபாமா இவ்வாறு கூறினார்.
ஈராக்கில் கார் குண்டு தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்க வீரர் ஹுமாயுன் கானின் பெற்றோரைப் பற்றி டிரம்ப் தெரிவித்த கருத்து களுக்கு குடியரசுக் கட்சியினர் கண்டனம் தெரிவித்திருப்பதை திரு ஒபாமா சுட்டிக் காட்டினார். ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துகளை டிரம்ப் கூறி வருவதாக குடியரசுக் கட்சியினர் கூறி வரும் வேளையில் பின்னர் எதற்காக அவரை இன்னமும் ஆதரிக்கின்றீர்கள்? என்று ஒபாமா கேள்வி எழுப்பினார். திரு ஒபாமாவையும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹில்லரி கிளின்டனையும் டிரம்ப் தொடர்ந்து குறை கூறி வரும் வேளையில் திரு ஒபாமா குடியரசுக் கட்சியினரிடம் நேரடி யாக இந்த வேண்டுகோளை விடுத்தார்.