மணிலா: தென்சீனக் கடல், கிழக்குச் சீனக் கடல் விவகாரங்களுக்குச் சட்டப்படி தீர்வுகாணும்படியும் சட்டத்தை மதித்து நடந்து கொள்ளுமாறும் சீனாவை பிலிப்பீன்சின் வெளியுறவு அமைச்சர் பெர்ஃபெக்டோ யாசே வலியுறுத்திஉள்ளார். வட்டாரப் பாதுகாப்பு, கடற்துறைப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றைப் பற்றி கலந்துரையாட ஜப்பான் வெளியுறவு அமைச்சர் ஃபூமியோ கிஷிடாவை பிலிப்பீன்சில் யாசே நேற்று சந்தித்தார். அப்போது பிலிப்பீன்சுக்கு கப்பல், விமானங்கள் அளித்து உதவுவதாக ஜப்பான் தரப்பில் மறுஉறுதி அளிக்கப்பட்டது. பத்து கப்பல்களை பிலிப்பீன்சுக்கு ஜப்பான் வழங்கவுள்ளது. நான்கு டிடி90 ரக கண்காணிப்பு விமானங்களையும் பிலிப்பீன்சுக்கு அது குத்தகைக்கு வழங்க உள்ளது.
சமரசத்துக்கு இடமின்றி கடற்துறைச் சட்டம், பாதுகாப்பு விதிகளை சீனா கடைப்பிடிக்க வேண்டும் என திரு யாசே செய்தியாளர்களிடம் கூறினார். திரு கிஷிடாவும் அதே கருத்தை வலியுறுத்தினார். தென்சீனக் கடல் பகுதியில் பிலிப்பீன்சும் கிழக்கு சீனக் கடல் பகுதியில் இருக்கும் சிறு தீவுகளுக்கு ஜப்பானும் உரிமை கோரும் விவகாரத்தில் சீனாவுடன் வேறுபாடு கொண்டுள்ளன. சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் பகுதியில் சீனா அண்மைக்காலமாக நில மீட்புப் பணிகளில் ஈடுபட்டு ராணுவ பலத்தை மேம் படுத்துவது வட்டார நாடுகளை விழிப்படையச் செய்துள்ளது. சென்ற மாதம் அனைத்துலக நீதிமன்றம் தென்சீனக் கடல் முழுவதும் தனக்குச் சொந்தம் எனும் சீனாவின் கோரிக்கையை நிராகரித்தது.