வாஷிங்டன்: அமெரிக்காவில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டோனல்ட் டிரம்ப், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான தனது திட்டம் பற்றி அறிவித்துள்ளார். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக அமெரிக்காவில் குடியேறியவர்களைப் பற்றி தீவிர ஆய்வு செய்யப்போவதாகக் கூறியுள்ளார்.
ஒகையோ மாநிலத்தில் பிரசாரக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், அமெரிக்காவின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு குறிப்பிட்ட சில நாடுகளிலிருந்து வருபவர்கள் அமெரிக்காவில் குடியேறுவது இடைநிறுத்தம் செய்யப்படும் என்று சொன்னார். ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதக் குழுவை துடைத்தொழிக்கப்போவதாகவும் டிரம்ப் உறுதியளித்தார். அதிபர் ஒபாமாவும் ஹில்லரி கிளின்டனும் ஐஎஸ் பயங்கரவாதக் குழு வளர்வதற்கு அனுமதித்து விட்டார்கள் என்று டிரம்ப் குறை கூறினார். தீவிரவாதத்திற்கு எதிராக போராட புதிய அணுகுமுறை தேவைப்படுகிறது என்றும் டிரம்ப் சொன்னார்.