வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களைத் தடுக்க பக்கத்து நாடான மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டுவதற்கான ஒட்டுமொத்த செலவையும் மெக்சிகோ அரசாங்கமே ஏற்கும் என்று அமெரிக்க குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அரிசோனாவில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.
அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் சட்டத் துக்குப் புறம்பாக குடியேறி இருப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். குறிப்பாக மெக்சிகோவில் இருந்து ஏராளமானவர்கள் சட்டவிரோமாக குடியேறி வருகின்றனர். எனவே அதைத் தடுக்க மெக்சிகோ எல்லையில் நீண்ட தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் என டிரம்ப் கூறியிருந்தார். அதே கருத்தை தற்போதும் பிரதிபலித்துள்ளார்.
முன்னதாக டிரம்ப் மெக்சிகோ சென்றிருந்தார். அங்கு அந்நாட்டு அதிபர் என்ரிக் பெனா நியடோவை சந்தித்துப் பேசினார். அப்போது இதுகுறித்து அவரிடம் பேசவில்லை என்று டிரம்ப் கூறினார். இந்நிலையில் மெக்சிகோ அதிபர் நியடோ, தடுப்புச் சுவர் கட்டும் செலவை மெக்சிகோ ஏற்காது என்று திரு டிரம்பிடம் தாம் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.