புத்ராஜெயா: மலேசியாவில் முதல் முறையாக ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஸிக்கா கிருமி தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அந்தப் பெண் 27 வயதான சீனப் பெண் என்றும் இவர் நான்கு மாத கர்ப்பிணி என்றும் இவர் ஜோகூர் பாரு, ஜாலான் டேசா ஹார்மோனியில் வசிப்ப தாகவும் மலேசிய சுகாதார அமைச்சர் சுப்ரமணியம் சதாசிவம், செய்தியாளர்களிடம் கூறினார். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்தப் பெண்ணின் கணவர் சிங்கப்பூரில் வேலை செய்கிறார். அவர் அன்றாடம் சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்பவர். அவரது கணவரிடமிருந்து அவருக்கு ஸிக்கா கிருமி தொற்றியதா என்பது குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சோதனை முடிவுகள் இன்னும் தெரியவில்லை என்றும் அமைச்சர் சொன்னார். அந்தப் பெண்ணுக்கு ஸிக்கா கிருமி தொற்றியிருப்பது முந்திய சோதனையில் தெரியவந்ததாகவும் திரு சுப்ரமணியம் கூறினார்.