மணிலா: பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட்டே, டாவோ நகர மேயராக இருந்தபோது அவரது எதிரிகளைக் கொல்ல உத்தரவிட்டதாக "டாவோ கொலைப் படை"யைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் ஒருவர் கூறியதைத் தொடர்ந்து டுட்டர்ட்டேயிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற நெருக்குதல் அந்நாட்டுக்கு அதிகரித்துள்ளது.
வியாழக்கிழமை செனட் விசாரணைக் குழுவிடம் சாட்சியம் அளித்த 57 வயது எட்கர் மாட்டோபாட்டோ என்பவர், திரு டுட்டர்ட்டேயின் உத்தரவின்படி 1988ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை தாமும் போலிஸ் குழு ஒன்றும் டாவோ நகரில் சுமார் 1,000 பேரைக் கொன்றதாகத் தெரிவித்தார். அந்தச் சமயத்தில் நீதித்துறை ஊழியர் ஒருவரை திரு டுட்டர்ட்டே சுட்டுக்கொன்றதாகவும் கூறப் பட்டது. இத்தகைய குற்றச்சாட்டுகள் மிகவும் கடுமையானவை என்ப தால் இவற்றை முக்கியமான ஒன்றாகக் கவனத்தில் கொள்வ தாகவும் இதுபற்றி ஆராயவிருப் பதாகவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சின் துணைப் பேச்சாளர் மார்க் டோனர் கூறியுள்ளார்.
திரு டுட்டர்ட்டே அதிபரான இந்த 72 நாட்களில், போதைப் பொருள் தொடர்பான சந்தேகப் பேர்வழிகள் சுமார் 3,000 பேர் கொல்லப்பட்டதாகவும் புகார்கள் கூறப்படுகின்றன. இந்நிலையில் டுட்டர்ட்டே டாவோ நகர மேயராக இருந்த போது எதிரிகளைக் கொல்ல உத்தரவிட்டார் என்ற தகவல் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. அந்தத் தகவல் குறித்து ஐநா புலன்விசாரணை மேற்கொள்ள பிலிப்பீன்ஸ் அனுமதிக்க வேண்டும் என்று மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு ஒன்று வலியுறுத்தியுள்ளது.
"அதிபர் டுட்டர்ட்டே தாமகவே விசாரணைக்கு உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்க முடியாது. ஆகவே இத்தகைய நடவடிக் கையில் ஈடுபட ஐநாவை கேட்டுக்கொள்வது அவசியம்," என்று அந்த அமைப்பின் இயக்குநர் பிரட் அடம்ஸ் கூறினார். திரு டுட்டர்ட்டே மீது தற்போது கூறப்படும் குற்றச் சாட்டுகளை அவரது மூத்த உதவியாளர்கள் மறுத்துள்ள போதிலும் அந்தக் குற்றச் சாட்டுகளை அதிபர் புறக்கணித்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.