கோலாலம்பூர்: ஓட்டுநர் சைஃபுல் அன்வார் புகாரியுடன் இயற்கைக்கு மாறான வகையில் பாலியல் உறவு கொண்டதற்காகத் தற்போது சிறையில் இருக்கும் அன்வார் இப்ராகிமை குற்றமற்றவர் என விடுவிப்பதற்கான முயற்சிகளை அவரது வழக்கறிஞர் குழு மேற்கொண்டுள்ளது. அது சாத்தியமாகாதபோது அவருக்கு வீட்டுக்காவல் விதிக்குமாறு நீதிமன்றத்தில் அவர்கள் கோரிக்கை வைக்க இருப்பதாக 'வீக்கெண்ட் ஆஸ்திரேலியன்' சஞ்சிகை தெரிவித்துள்ளது. வீட்டுக்காவலுக்கு மலேசிய சட்டத்தில் அனுமதி உண்டு. அடுத்த மாதம் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்ட மறு ஆய்வின்போது, அன்வார் மீதான குற்றச்சாட்டுக்கு மரபணு ஆதாரம் இல்லாததையும் சைஃபுல் அன்வார் புகாரியின் வாக்குமூலம் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததையும் அவரது வழக்கறிஞர்கள் வலி யுறுத்தி அவரது விடுதலைக்காக வாதிடக்கூடும் என அமெரிக்க வழக்கறிஞர் கிம்பர்லி மோட்லி கூறியுள்ளார்.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள மறு ஆய்வுதான் அன்வார் மீதான குற்றச்சாட்டை பொய்ப்பிக்க சட்டரீதியான இறுதி நடவடிக்கையாக இருக்கும். 2014ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அன்வாருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அன்வார் மீதான தீர்ப்பு அரசியல் நோக்கத்துடனானது என்று பல தரப்பினராலும் குறிப்பிடப்பட்டது. அன்வாருக்கு அநியாயம் இழைக்கப்பட்டிருப்பதாக மிகவும் வலுவாக உணர்ந்ததால் இந்த வழக்கை எடுத்துக்கொண்டதாக மனித உரிமைகள் பிரிவில் நிபுணத்துவம் பெற்ற திருவாட்டி மோட்லி கூறியுள்ளார். அன்வாரைச் சந்திக்கவும் எதிர்காலத்தில் வழக்குகளில் அவ ருக்கு ஆதரவாக வாதிடவும் விருப்பம் கொண்டுள்ளதாக மோட்லி குறிப்பிட்டார். அன்வாரை சுங்கை புலோ சிறையில் சந்தித்த அவர், அன்வார் மிகவும் களைப்பாக இருப்பதாகவும் சட்ட மறு ஆய்வை ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பதாகவும் கூறினார்.