அலெப்போ: சிரியாவில் கிளர்ச்சி யாளர்கள் வசம் உள்ள அலெப்போ நகரைக் கைப்பற்ற சிரியா ராணுவம் கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. கிளர்ச்சியாளர் களின் முகாம்கள் மீது சிரியா விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்கி வருகின்றன. இந்த அதிரடித் தாக்குதலில் குறைந்தது 13 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. அலெப்போ நகரில் உள்ள பல கட்டடங்கள் தீப்பற்றி எரிவதாக தகவல்கள் கூறு கின்றன. சிரியாவில் சண்டை நிறுத்த உடன்பாடு தோல்வி அடைந்துள்ள நிலையில் அதுகுறித்து அமெரிக்க, ரஷ்ய வெளியுறவு அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை எந்த முன்னேற்றமும் இல்லாமல் முடிவுற்றது. சிரியாவுக்குள் ரஷ்ய போர் விமானங்கள் பறப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண் டும் என அக்கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி வலியுறுத்தினார்.
இதை ஏற்றுக்கொள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் மறுத்துவிட்டார். ரஷ்ய வெளியுறவு அமைச்சருடன் தொடர்ந்து பேச்சு நடத்தவிருப்பதாக திரு கெர்ரி தெரிவித்துள்ளார். சிரியாவில் நீடிக்கும் உள்நாட்டு சண்டையை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா மற்றும் ரஷ்யா முயற்சியில் சண்டை நிறுத்த உடன்பாடு காணப்பட்டது. இந்த உடன்பாடு நடப்பில் இருந்தபோதே கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளில் சிரியா ராணுவமும் ரஷ்ய விமானங்களும் குண்டு களை வீசித் தாக்கியதில் பலர் கொல்லப்பட்டனர். அலெப்போ நகரில் நிவாரண உதவிப் பொருட்களை ஏற்றிச்சென்ற ஐநா வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ரஷ்யாவே காரணம்` என்று அமெரிக்கா கூறும் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.
சிரியா ராணுவம் தாக்குதல் நடத்திய பகுதியிலிருந்து சிறுவர்களை குடிமைத் தற்காப்புப் படையினர் காப்பாற்றுகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்