அலெப்போ: சிரியாவில் போராளிகள் வசமிருக்கும் கிழக்கு அலெப்போ பகுதியில் சிரியா, ரஷ்யா ஆகியவற்றின் போர் விமானங்கள் இரண்டாவது இரவாக நேற்றும் குண்டுமழை பொழிந்தன. அலெப்போ நகரின் கிழக்குப் பகுதியை போராளிகளிடமிருந்து மீட்டெடுக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு மேற்கொள்ளப்பட்ட கோரத் தாக்குதலில் சிக்கி குறைந்தது 47 பேர் மாண்டு போயினர். அவர் களில் எழுவர் சிறுவர். பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு இந்தத் தகவலை வெளியிட்டது.
தொடரும் தாக்குதலால் தரைமட்டமாகும் கட்டட இடிபாடுகளில் சிக்கி மேலும் பலர் உயிரிழக்கும் அபாயம் இருப்பதால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கூறப்பட்டது. வெள்ளிக்கிழமை நிகழ்ந்த கோரத் தாக்குதலில் குடிமைத் தற்காப்பு அமைப்பின் நிலையங்களும் சேதமுற்றன. அந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள அழிவைக்கண்டு குடிமைத் தற்காப்பு அமைப்பினரே மலைத்துப்போயுள்ளனர்.
கடந்த ஜூலை மாதத்திலிருந்து கிழக்கு அலெப்போவில் சுமார் 250,000 பேர் தொடர்ந்து முற்றுகைக்கு உட்பட்டுள்ளனர். கிழக்கு அலெப்போவில் வசிப்போர் போராளிகளிடமிருந்து விலகியிருக்குமாறும் அவர்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு பாதுகாப்பாகச் செல்ல வசதிகள் செய்து தரப்படும் எனவும் சிரியாவின் ராணுவம் குறிப்பிட்டு உள்ளது.