ஜகார்த்தா: இந்தோனீசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் ஒரு பாலம் சரிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்ததாகவும் நால்வர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். அப்பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தபோது அந்தப் பாலம் சரிந்து விழுந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
இதனால் பாலத்திற்கு அடியில் நடந்து சென்றவர்கள் காயம் அடைந்ததுடன் அந்தப் பாலத்தை பயன்படுத்தியவர்களும் கீழே சாலையில் விழ நேரிட்டது என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார். பாலத்தின் ஒரு பகுதியே இடிந்து விழுந்தது என்று கூறிய அந்த இடத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அந்தப் பாலம் இரும்புச் சட்டங்களால் செய்யப்பட்டவை என்பதையும் அவை துருப்பிடித் திருப்பதையும் ஒப்புக்கொண்டார்.
கனமழை காரணமாக அப்பாலம் இடிந்து விழுந்ததாகக் கூற முடியாது என்று வாகன ஓட்டுநர் ஒருவர் கூறினார்.
ஜகார்த்தா தென் பகுதியில் உள்ள ஒரு பாலம் சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து தீயணைப்பாளர்களும் மீட்புக் குழுவினரும் அவ்விடத்திற்கு விரைந்து சென்றனர். இந்தப் பாலம் ரயில் நிலையத்துடன் இணைக்கப்பட்டிருப்பதால் அந்த ரயில் நிலையத்திற்குச் செல்ல பலர் இந்தப் பாலத்தை பயன்படுத்தி வந்தனர். படம்: ஜகார்த்தா போலிஸ்