இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2015-ம் ஆண்டில் மட்டும் 2108 பேரை பாகிஸ்தான் போலிசார் சுட்டுக் கொன்றுள்ளனர் என்று அனைத்துலக தொண்டூழிய நிறுவனம் ஒன்று குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்ட மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு உலகம் முழுவதும் கிளைகளை அமைத்து செயல்படுகிறது. அந்த அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரம் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் போலி என்கவுன்ட்டர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. அந்த நாட்டு போலிசார் எவ்வித விசாரணையும் இன்றி பலரைச் சுட்டுக் கொன்று வருகின்றனர்.
கடந்த 2015-ம் ஆண்டில் 2108 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவங்களில் ஒரு போலிசார்கூட காயம் அடையவில்லை என்பது வியப்பளிக்கிறது என்றும் அந்த அறிக்கை கூறியது. விசாரணைக் கைதிகளிடமும் போலிசார் அத்துமீறி நடந்து கொள்கின்றனர். கை, கால் எலும்புகளை உடைப்பது, கொடூரமாக சித்ரவதை செய்வது ஆகிய சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பெண் கைதிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும் கூறப்பட்டது. பாகிஸ்தான் போலிசார் மீது அந்த நாட்டு மக்கள் நம்பிக்கை இழந்து வருவதாக அந்த அறிக்கை கூறுகிறது.