ஜெருசலம்: மறைந்த இஸ்ரேலிய முன்னாள் அதிபர் ஷிமோன் பெரசின் இறுதிச் சடங்கில் உலகத் தலைவர்கள் பலர் கலந்துகொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர். அமெரிக்க அதிபர் ஒபாமா, அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன், பாலஸ்தீன தலைவர் மஹமூத் அப்பாஸ் உள்பட உலகத் தலைவர்கள் பலர் ஜெருசலத்தில் நடந்த பெரசின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண் டனர். சுமார் 70 நாடுகளின் பிரதிநிதிகளும் பெரசின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இறுதிச் சடங்கினை முன்னிட்டு இஸ்ரேலில் நேற்று பாதுகாப்பு வலுப்படுத்தப் பட்டிருந்தது. சுமார் 8,000 போலிசார் பாதுகாப்புப் பணி களில் ஈடுபட்டிருந்தனர். இரு முறை இஸ்ரேலியப் பிரதமராகவும், ஒரு முறை அதிபராகவும் பதவி வகித்த பெரஸ் அவரது 93 வயதில் கடந்த புதன்கிழமை மரணம் அடைந்தார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மறைந்த தலைவர் ஷிமோன் பெரசை உலகத் தலைவர்கள் பாராட்டினர். உலகின் சிறந்த மாமனிதர் பெரஸ் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன் யாகுவும் திரு பில் கிளின்டனும் பாராட்டினர்.
மறைந்த இஸ்ரேலிய முன்னாள் அதிபர் ஷிமோன் பெரசின் இறுதிச் சடங்கில் அமெரிக்க அதிபர் ஒபாமா, இஸ்ரேலியப் பிரதமர் நெட்டன்யாகு உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற வளாகத்திலிருந்து பெரசின் உடல் ராணுவ மரியாதையுடன் எடுத்துச் செல்லப்பட்டது. படம்: ஏஎஃப்பி