வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் தெடர்பான அண்மைய கருத்துக் கணிப்பில், ஆளும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹில்லரி கிளின்டன், டிரம்பை விட 3 விழுக்காடு வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 8ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹில்லரிக்கும் குடியரசு கட்சி வேட்பாளர் தொழிலதிபர் டோனல்ட் டிரம்ப்பிற்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வெற்றி பெறுவது யார் என்பது தொடர்பாக கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதுவரை நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் ஹில்லரி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். கடந்த மாதம் நடந்த நேரடி விவாதத்தற்குப் பிறகு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பிலும் டிரம்பைவிட ஹில்லரிக்கே அதிக செல்வாக்கு இருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் வரும் தேர்தலில் இவர்கள் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தலில் ஹில்லரி வெற்றி பெற்றால் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமை அவருக்குச் சேரும்.