ஹனோய்: விஷம்கொண்ட கழிவுகள் கடலில் கலந்து அதிக அளவில் மீன்கள் இறந்துபோவதால் தைவானில் இருக்கும் ஃபார்மோசா ஸ்டீல் உற்பத்தி நிறுவனம் ஒன்றின் செயல்பாட்டை நிறுத்துமாறு ஆயிரக்கணக்கான வியட்னாமியர்கள் நேற்று போராட்டத்தில் குதித்தனர். கய் ஆனில் இருக்கும் அந்த நிறுவனத்தைச் சூழ்ந்த போராட்டக்காரர்கள் மதில்களின் மீது ஏறியும் பதாகைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கத்தோலிக்க சமயகுரு ஒருவரின் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பைபிள் வாசகங்களையும் உச்சரித்ததைக் காட்டும் காணொளிகள் இணையத்தில் வலம் வந்தன. மீன்பிடித் தொழிலே பிரதானமாக இருந்துவரும் வியட்னாமின் கடற்கரை கிராமங்களில் சென்ற ஏப்ரல் மாதத்தில் பல்லாயிரக்கணக்கான மீன்களும் பிற கடல்வாழ் உயிரினங்களும் செத்து கரை ஒதுங்கின.
நாட்டின் மோசமான சுற்றுச்சூழல் பேரிடர்களில் ஒன்றாக அது கருதப்பட்டது. பல பில்லியன் மதிப்பிலான ஸ்டீல் உற்பத்தி நிறுவனம் ஒன்றை ஹா டின் பகுதியில் தைவானின் ஃபார்மோசா நிறுவனம் உருவாக்கி வருகிறது. மீன்களின் இறப்புக்கு அந்த நிறுவனம் கழிவுகளைக் கடலில் வெளியேற்றுவதே காரணம் என்று கூறப்பட்டு அதற்கு $682 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டது. மீன்கள் இறந்ததால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 130 முதல் 1,600 அமெரிக்க டாலர்கள் வரை உதவித்தொகையாக வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது. நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூடுதல் இழப்பீடு கோரினர்.