கோலாலம்பூர்: மலேசிய எதிர்க் கட்சியின் முன்னாள் தலைவர் அன்வார் இப்ராகிமும் மலேசிய முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசினும் நேற்று சந்தித்துப் பேசியுள்ளனர். பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பிபிபிஎம்) என்று அழைக்கப்படும் புதிய கட்சியின் இடைக்காலத் தலைவரான முகைதின், நேற்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திற்கு வந்திருந்த கெஅடிலான் கட்சி ஆலோசகர் அன்வார் இப்ராகிமைச் சந்தித்துப் பேசினார். அன்வாருடன் 30 நிமிடம் முகைதின் பேசியதாகக் கூறப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய திரு முகைதின், கட்சி ஒற்றுமை குறித்து தாங்கள் பேசியதாகக் கூறினார். வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியை எதிர் கொள்ள வலுவான கூட்டணியை அமைப்பது குறித்து தாங்கள் பேச்சு நடத்தியதாக முகைதின் கூறினார்.
அந்தச் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், எதிர்க்கட்சி கூட்டணி யான பக்கத்தான் ஹராபானும் பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியும் எதிரணியை வலுப்படுத்துவதற்காக பாஸ் கட்சியுடன் பேச்சு நடத்தும் என்று சொன்னார். பாஸ் கட்சியுடன் பேச்சு நடத்த தாங்கள் இருவரும் ஒப்புக்கொண்டதாக அவர் சொன்னார். அப்படியனால் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணியில் பாஸும் இடம்பெறுமா என்று செய்தியாளர்கள் வினவியதற்கு, "முதலில் பேசுவோம். அதன் பின் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்," என்று அன்வார் கூறினார். மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் அண்மையில் அன்வாரை சந்தித்துப் பேசினார்.