டமாஸ்கஸ்: சிரியாவில் உள்நாட்டுச் சண்டை தீவிரம் அடைந்துள்ள வேளையில் சிரியா குறித்து மீண்டும் பேச்சு நடத்த அமெரிக்காவும் ரஷ்யாவும் இணங் கியுள்ளன. சிரியாவில் நீடிக்கும் சண்டையை முடிவுக்குக் கொண்டுவர மீண்டும் பேச்சு நடத்த அவ்விரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இணங்கியுள்ளனர். இதற்கிடையே சிரியாவில் இரண்டாவது பெரிய நகரான அலெப்போவில் ரஷ்ய விமானங் கள் குண்டுகளை வீசித் தாக்கி வருவதால் அந்நாடு போர்க் குற்றச் செயல்களை எதிர் நோக்கக்கூடும் என்று கூறப்படும் வேளையில் அத்தகைய குற்றச்சாட்டினை ரஷ்ய அதிபர் புட்டின் நிராகரித்துள்ளார்.
சிரியா அதிபர் ஆசாத்திற்கு ஆதரவாக ரஷ்ய விமானங்கள் தாக்குதல்களை நடத்தி வரு கின்றன. அலெப்போ நகரில் கிளர்ச்சித் தரப்பினர் வசம் உள்ள பகுதிகளைக் கைப்பற்ற அரசாங் கப் படை கடுமையாகச் சண்டை யிட்டு வரும் வேளையில் அதற்கு ஆதரவாக ரஷ்ய போர் விமானங்ள் குண்டுகளை வீசித் தாக்கி வருகின்றன. ரஷ்யாவின் இத்தகைய செயல் போர்க் குற்றமாக கருதப்படலாம் என்று பிரெஞ்சு அதிபர் ஹொலாண்ட் கருத்து தெரிவித்திருந்தார். இதனால் ரஷ்ய அதிபர் புட்டின், பிரெஞ்சு பயணத்தை ரத்து செய்துவிட்டதாகக் கூறப்பட்டது.
சிரியாவில் ரஷ்யா தலையிடு வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால் ரஷ்ய விமானங்கள் அலெப்போ நகரில் குண்டுகளை வீசித் தாக்கி வருகின்றன. இந்தத் தாக்குதல்களில் கடந்த இரு நாட்களில் மட்டும் சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறின. அலெப்போவில் கிளர்ச்சித் தரப்பினர் வசம் உள்ள பகுதிகளில் ரஷ்ய விமானங்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. அரசாங்கப் படையினரும் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு பதற்றம் நீடிக்கிறது.
அலெப்போ நகரில் கிளர்ச்சித் தரப்பினர் வசம் உள்ள பகுதிகளில் விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்கியதில் சந்தைப் பகுதி முற்றிலும் சேதம் அடைந்தது. படம்: ராய்ட்டர்ஸ்