அர்பில்: கிழக்கு ஈராக்கில் மோசுல் நகருக்கு அருகேயுள்ள கிறிஸ்துவ நகரான பர்ட்டாலாவை ஈராக்கின் சிறப்பு பயங்கரவாத எதிர்ப்புப் படை ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிடமிருந்து வியாழக்கிழமை கைப்பற்றியதாக ஏஎஃப்பி செய்தித் தகவல் கூறுகிறது. இந்த நகரத்தை சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு கைப்பற்றியது. அப்பொழுது அதில் வசித்து வந்த ஏறக்குறைய 10,000 பேர் அந்நகரிலிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
"பர்ட்டாலா நகரை எங்கள் முழுக் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டுள்ளோம் என்பதை பர்ட்டாலா, மோசுல் நகர மக்களுக்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன். அங்கு வசிப்பவர்கள், நகரத்தின் தேவாலயங்கள், அங்குள்ள கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் சிறப்பு பயங்கரவாத எதிர்ப்புப் படையின் கட்டுப்பாட்டில் இருப்பதை நான் அறிவிக்கிறேன்," என்று அந்தப் படைத் தளபதியான தாலேப் ஷெகாத்தி அல் கெனானி தெரிவித்தார்.
பர்ட்டாலா நகரைக் கைப்பற்றியது ஈராக்கிய அரசுக்கு அண்மைய காலத்தில் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று கூறப்படுகிறது. "மோசுல் நகரை நாங்கள் திரும்பப் பெறப்போவதை அந்நகர மக்களுக்கு நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம்," என்று திரு கெனானி விளக்கினார்.